Friday, March 11, 2016

சுவாமி புறப்பாடு

" சுவாமி புறப்பாடு "என்பது ஆலயத்திலுள்ள  மூல மூர்த்திகள் உற்சவ மூர்த்திகளில்  ஆவாகனம் செய்யப்பட்டு வீதி உலாவாக எழுந்தருளுவதைக் குறிக்கும். அந்தந்த ஊரின் ஸ்தல புராணத்தில் குறிப்பிட்டபடி உற்சவங்கள் ,தீர்த்தவாரிகள் நடைபெறுகின்றன. எல்லா ஊர்களுக்கும் பொதுவான மார்கழித் திருவாதிரை, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம்  போன்ற விசேஷ நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கொடி ஏற்றத்திலிருந்து தீர்த்தவாரி வரையில் வாகனங்களில் புறப்பாடு செய்வதும் சிவாகம விதிகளை ஒட்டியே நடைபெறுகின்றன.  இவ்வாறு மூலவரே உற்சவராகத் திருவீதிக்குச் செல்வதால், சுவாமி மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்வரை மூலஸ்தானக் கதவுகளை மூடி வைப்பதும் வழக்கம். அவ்வாறு வலம் வரும் வீதிகள் புனிதமாகக் கருதப்பட்டு மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சுவாமியின் வருகையை எதிர் நோக்கிய காலங்களை முதியவர்கள் நன்கு அறிவர். கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையிலிருக்கும் வயோதிகர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும்  வீட்டு வாசலிலேயே இறைவனை வழிபட ஏதுவாகப் புறப்பாடுகள் அமைந்துள்ளன. " நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி " எனத் திருவாசகம் கூறுவதைக் காண்க.

ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயத்திற்கு வந்து  சேரும் வரை  புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதை ஆலய சிப்பந்திகளும், நிர்வாகத்தினரும் சுவாமி தூக்குவோரும், இசைக் குழுவினரும்,பொது மக்களும் நினைவில் கொள்ளவேண்டுவது மிகவும் அவசியம்.  வெறும் விக்கிரகம் தானே என்ற அலட்சியம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

மூர்த்தியை அலங்காரம் செய்வதிலிருந்து இந்த எண்ணம் ஏற்பட வேண்டும். தேவை இல்லாமல் மூர்த்திக்குச் செயற்கையாகக்  கை - கால்கள் வைத்துக் கயிறுகளால் கட்டுவதும்,முகத்தில் மையால் கண் வரைந்து இயற்கை அழகைக் கெடுப்பதும் தவிர்க்க வேண்டிய செயல்கள்.,

வாகனத்தில் மூர்த்தியை ஏற்றி,மலர் அலங்காரம் செய்தபிறகு தரையோடு தர-தர என்று இழுப்பதை ஒருக் காலும் அனுமதிக்கக் கூடாது. வாகன தூக்கிகள்  சட்டை-லுங்கிகள் அணியாதவர்களாகவும் திருநீறு பூசியவர்களாகவும் இருத்தல் அவசியம். ஆங்காங்கே நிறுத்துவதற்குக் கட்டைகளைக் கையில்  ஏந்தி வருவதை விட, அக்கட்டைகளை வாரைகளோடு கட்டியிருந்தால் எதிர்பாராத விதமாக ஒரு  புறத்தில் சுவாமி சாயும்போது நிலத்தில்  விழுந்துவிடாமல் இருக்க இது உதவும்.

காவிரியைக் கடந்து பல்லக்கு மணல் சரிவில் ஏறுதல் 
தோள்களில் ஏற்றிக் கொண்ட பிறகு பல ஊர்களில் மூர்த்தியின்  நடனம் எனச் சொல்லிக் கொண்டு சுவாமி தூக்கிகள் வாரைகளை இறக்கியும் ஏற்றியும் ஆட்டுகிறார்கள். இப்படிச் செய்யும்போது ஒருபுறம் சுவாமியைத் தாங்கிக் கொள்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கீழே விழுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.

சென்ற ஆண்டு சித்திரையில் சப்த ஸ்தானப் பல்லக்கு நிலத்தில் சுவாமியோடு விழுந்ததும், இந்த ஆண்டு மாசி மகத்தில் காரைக்கால் அருகிலுள்ள   ஓர் ஊர் சுவாமியையைத் தூக்கியவர்கள் தவற விட்டு நிலத்தில் விழும்படி செய்ததும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுவாமியை லேசாக அசைத்தாலே போதும். இவர்கள் குக்குட நடனமும் உன்மத்த நடனமும் ஆட ஏன் முயற்சிக்கிறார்கள்?  அவை ஈசன்  ஒருவனாலேயே ஆடப்பட வேண்டியவை. போதாக்குறைக்குப் பல ஊர்கள்  சுவாமி தூக்கிகள் சுய நிலையில் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தோள்களிலே வாகனங்களுடன் மூர்த்திகள் தூக்கப்பட்டு வந்ததுபோக, இப்போது டயர் வண்டிகளிலும், ட்ராக்டர்களிலும் மூர்த்திகள் உலா வருகின்றனர். தூக்கும் ஆட்கள் போதிய அளவு இல்லாததும் முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. எது எப்படி இருந்தாலும்  விழாவின் புனிதம் கெடாமல் இருக்க இன்னும் கவனம் தேவைப் படுகிறது.  வளைக் கடைகளும், பலூன் வண்டிகளுமே விழா என்று ஆகி விடக் கூடாது. உற்சவம் என்பது கேளிக்கை அல்ல. நம்மை வீடுதோறும் நாடி வந்து அருள் செய்யவரும் தெய்வத்தைப் போற்றும் விழா என்பதை நாம் மறக்கவே கூடாது.  

5 comments:

  1. Well brought out the essentials in swami purappadu

    ReplyDelete
  2. Well brought out the essentials in swami purappadu

    ReplyDelete
  3. Thank you, Sekhar. When our minds are truly filled with gratitude for the Love that reaches out to us always from the Paramatma, the sanctity of every ritual and every detail in it makes us truly humble, attentive and respectful.

    ReplyDelete
  4. Very true,We should try to preserve the sanctity in each and every step.

    ReplyDelete