Friday, July 24, 2015

ஏகாம்பரநாதருக்குப் புதிய உற்சவரா?

எத்தனையோ ஆலயங்களில் பல்லாண்டுகளாக விக்கிரகங்கள் களவாடப்பட்டிருந்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் நமது அரசாங்கம் அலட்சியம் காட்டி வருவதை 23.7.2015 தேதியிட்ட   அமெரிக்க நாளிதழான " நியூயார்க் டைம்ஸ் " சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் கூட்டுச் சதிக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த இத்தனை காலதாமதம் ஆவதும் வியப்புக்குரியது என்று அதில் கருத்துத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என பெயரில் சுற்றிலும் உள்ள ஊர்களின் விக்கிரகங்களை ஒரு கோவிலில் வைத்துப் பூட்டியுள்ளதை இந்து  அறநிலையத்துறை செய்துவரும் நிலையில், சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மூர்த்திகளோடு , அருகிலுள்ள  கிராமக் கோயில்களின் விக்கிரகங்களும் அந்த ஊர்ப் பெருமாள் கோயிலில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தும், கொள்ளையர்கள் அவற்றைக் களவாடிச் சென்றதையும் இப்பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. நம்மவர்கள் எச்சரித்தால் அதை ஏற்றுக்கொள்வதில் கெளரவம் பார்க்கும் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. இதனைப் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைத்தாலும் அக் கமிட்டியின் பரிந்துரைகள் தயார் ஆகப் பல மாதங்கள் ஆகும். அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் கிடங்கில் பல்லாண்டுகள் போட்டுக் கிடத்தப்படும் . அது வரையில் விக்கிரகங்கள் எவ்வாறு பாதுகாக்கப் படும் என்பதே கேள்வி.

பாதுகாப்பான ஆலயங்களிலும் விக்கிரகங்களின் பழமை காரணமாகத் தேய்மானம் ஏற்படுவது இயற்கை. அவ்வாறு முற்றிலும் தேய்ந்தபிறகே அதனைப் பழுதுபார்ப்பதா அல்லது அதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய விக்கிரகத்தை வார்த்துக் கொள்வதா என்று யோசிக்கிறார்கள். அவ்வாறு விக்கிரகங்கள் தேய்வதன் முக்கிய காரணம் தினமும் அபிஷேகங்கள் செய்வதும், அவ்வாறு செய்தபின் அவற்றில் ஒட்டியுள்ள நீரை முற்றிலும் அகற்றாமல் விடுவதுமே ஆகும். ஒருவேளை மூர்த்தியை உலர்ந்த வஸ்திரத்தால் துடைத்தாலும், மூர்த்தியின் பீடத்திலும்,அதன் கீழும் உள்ள ஈரம் துடைக்கப்படாமல் அப்படியே விட்டு விடப் படுகிறது. அப்படிப்பட்ட இடங்களில் அரிப்பு ஏற்பட்டுப் பசுமை ஆகிவிடுவதைக் காண முடியும்.  நாளடைவில் அவ்விடங்கள் வேகமாகத் தேய ஆரம்பித்து விடுகின்றன. காற்றுப்பட்டே கறுத்துவிடும் விக்கிரகங்களும் உண்டு. ஒரு விக்கிரகம் தேய ஆரம்பித்த உடனே ,அதனை மேலும் தேயாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. விசேஷ தினங்களில் மட்டுமே உற்சவருக்கு அபிஷேகங்கள் நடத்துவது தேய்மானத்தைத் தாமதப் படுத்தும். தினந்தோறும் நீரால் புரோக்ஷணம் செய்யலாம். ஆகம வல்லுனர்கள் கவனத்திற்கு இதனை விட்டு விடலாம். வைணவக் கோயில்களில் இம்முறை பின்பற்றப்படுகிறது.  சிவாலயங்களிலும் நடராஜ மூர்த்திக்கு ஆண்டில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

விக்கிரகங்கள் பலம் குறைவதற்கு மற்றொரு முக்கியமான  காரணம் அவற்றைக் கையாளும் முறை. ஆர்வம் காரணமாகப் பல ஊர்களில் சுவாமியைத் தோளில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்( குதிக்கிறார்கள் என்று  கூடச் சொல்லலாம்). வாகனத்தில் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் விக்கிரகத்தின் அடிப் பாகம் ஏற்கனவே பலவீனமாக இருந்தால், அதை இச்செயல் மேலும் வலி  இழக்கச் செய்யக் கூடும். சில ஊர்களில் நடனம் என்ற பெயரில் கிட்டத்தட்ட 90 டிகிரிக்கு சுவாமியைத் தோளில் வைத்தபடி சுழற்றுகிறார்கள் . அப்படிச் செய்யும்போது தோளில் இருந்து தவறிப் பல்லக்கோடு சுவாமி வீதியில் விழுந்ததையும்  பலர் அறிவர். தூக்குபவர்களின் நிலையோ சொல்லும் தரமன்று! இப்படி இருக்கும்போது இந்த ஆட்டம் எதற்காக? மெதுவாக அசைந்தாலே போதும் அல்லவா?

பின்னணி இவ்வாறு இருக்கும்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமியின் (உற்சவ மூர்த்தியின்) பீடம் பழுதடைந்ததாகவும் அதனால் வசந்த உற்சவம் நின்று விட்டதாகவும் , வேறொரு புதிய மூர்த்தியை காஞ்சி சங்கர மடம் செய்து  உற்சவத்திற்காகத் தருவதாகவும், அதன்படி செய்வதா அல்லது பழைய விக்கிரகத்தைப் பழுது பார்ப்பதா என்று யோசித்து வருவதாகவும்  பத்திரிக்கை செய்தி குறிப்பிடுகிறது.
இதனால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. பீடம் முற்றிலுமாகப் பழுது அடைவதை ஏன் முன்னரே கண் காணிக்கவில்லை?

2 கண்காணித்திருந்தால் தடுப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை?

3 பங்குனி உற்சவத்தில் வீதி உலா சென்ற மூர்த்தி ஒரு சில மாதங்களிலேயே முற்றும் பழுதாகி விட முடியுமா?

4 சுவாமியின் நெற்றியில் பல்லாண்டுகளாக சந்தானம் இடப்பட்டதால் அதிலுள்ள நீர் அப்பகுதியை ஆழமான வடுவாக்கி விட்டது தெரிந்தும், தினந்தோறும் அந்த வடுவை அடைப்பதுபோலப் பெரிய அளவில் சந்தனம் இடப்படுவதால் அப்பகுதி மேலும் பாதிக்கப் படாதா? நெற்றியில் அவ்வடுவை மறைக்கக் கல் இழைத்த நெற்றிப்பட்டை வைக்கலாமே! பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். சந்தனத்தை சிறிய பொட்டாக வைத்து நெற்றிப் பட்டையை வைப்பதால் மூர்த்திக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் செய்ய முடியும்.                   ( இதனை  " சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு " என்று சம்பந்தரும் பாடி இருக்கிறார்.)

5  எக்காரணம் கொண்டும் மூர்த்தியைக் கோயிலுக்கு வெளியில் அனுப்பிப் பழுது பார்க்கக் கூடாது. அவ்வாறு அனுப்பப்படும் மூர்த்திகள் களவாடப்பட்டுப் போலியான மற்றொரு விக்கிரகம் கோயிலுக்கு வந்து சேரும் அபாயம் இருக்கிறது. இதனை மேற்கூறிய அமெரிக்க நாளிதழ் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

6 கோயிலுக்குள் தக்க ஸ்தபதியாரைக்  கொண்டு பழுது பார்க்கும்போது ஆலய நிர்வாகிகளும், சிவாசார்யர்களும் உடன் இருத்தல் மிக மிக முக்கியமானது. அவ்வாறு துவங்கும் முன்பாக மூர்த்தியைக்  கலசத்தில் ஆவாகனம் செய்தும், வேலை முடியும் வரை ஸ்ரீ ருத்ரம்- திருமுறைப்  பாராயணங்கள் சன்னதியில் பாராயணம் செய்யப்படவேண்டும். இந்நிகழ்ச்சி பக்தி பூர்வமாகச் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.. வேலை பூர்த்தியானதும் கலச நீரால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். ஆகம விற்பன்னர்கள் ஆகம வழி நின்று இதற்குத் துணை புரிய வேண்டும்.

7 புதிய விக்கிரகம் செய்து கொண்டு மாற்று வழி தேடுவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. புதிய விக்கிரகமும் பூம்புகார் விக்கிரகமும் ஒன்றே என்று ஆகி விடும். பழைய மூர்த்திக்கு அதன் சாந்நித்தியம் பெருமை சேர்க்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. காஞ்சியிலும் பிற ஊர்களிலும் உள்ள சிவனடியார்கள் இக்கருத்தை ஏற்பர் என நம்புகிறோம்.

பலமுறை எழுதியும் பத்திரிகைகள் விக்கிரகத்தை தெய்வமாகக் கருதாமல் உலோகச் சிற்பமாகவே காண்பது வேதனைக்கு உரியது. அதன் மதிப்பு எவ்வளவு என்பதிலும் எந்த  உலோகத்தினால்  செய்யப்பட்டது என்பதிலுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வத்தால் அடியார்களே வலைத்தளங்களில் கோயில்களில் உள்ள மூலவர்  மற்றும் உற்சவர் படங்களை அடிக்கடி வெளி யிடும்போது , பரபரப்பான செய்திக்காகக் காத்திருக்கும் செய்தித் தாள்களைப் பற்றிச் சொல்வானேன்? இத்தனைக்கும் காரணம் நம்மிடையே தெய்வத்திடம் பக்தியும் பயமும் இல்லாமல் போனதுதான்.    

No comments:

Post a Comment