Tuesday, April 28, 2015

நேபாளத்தில் துயரம்

நேபாளத்தில் நடந்துள்ள நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கும் மேலான சகோதர-சகோதரிகள்  இடிபாடுகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. மேலும் பழங்காலக் கலைச்சின்னங்களும் இந்துக் கோயில்களும் இடிந்து விட்டன என்றும் அறிகிறோம். எத்தனையோ குடும்பங்கள் வீடுகளையும் உற்றார்களையும் இழந்து நடுவீதிகளில் தவிக்கும் படங்களைக் காணும்போது சொல்லமுடியாத துயரம் ஏற்படுகிறது. நேபாள மக்களுக்கு இந்த அதிர்ச்சி , மனத்தை விட்டு  நீங்கமுடியாத சோகமாக ஆகிவிட்டது.

இந்தியாவிலும் இதன் தாக்கத்தால் அறுபது பேருக்கும் மேலானவர்கள் உயிர் இழந்துள்ளார்கள். நேபாளத்தின் துயரத்தில் நமக்கும் பங்கு உண்டு. இரு நாடுகளுக்கும் ஒருமித்த கலாசாரம் உண்டு.ஆகவே,இத்துயர சம்பவம் நடந்த அன்றே , நமது அரசாங்கம் அந்நாட்டிற்குத் தேவையான  உதவிகளைச் செய்ய முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டியதும் நேபாள மக்களுக்கு ஆறுதலை அளிப்பதுமான செயல்.

உயிரிழந்தோருக்காக நாட்டின் பல பாகங்களிலும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்நாட்டு மக்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும், நம்மாலான உதவிகளை அப்பரிதவிக்கும் மக்களுக்குச் சேரும்படி செய்ய வேண்டியது அவசியம். பிற நாடுகளின் உதவியை நேபாளம் எதிர்நோக்கி இருக்கும் இந்த வேளையில் இந்தியா முன்னின்று உதவ வேண்டும்.

ஆயிரக்கணக்கான பொது நலத் தொண்டர்கள் நேபாளம் விரைந்துள்ளனர் என்பது ஆறுதலான செய்தி. நேரில் சென்று உதவுவதுபோல் பணத்தால் செய்து விட முடியாது. இப்புண்ணி யச் செயலில் ஈடுபடுவோரைக் குறை சொல்லுபவர்களும் உளர். அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நம்மால்தான்  செய்ய முடியவில்லை. செய்பவர்களையும் குறை சொல்வானேன்? அவர்கள் தங்களது சொந்தக் காசை செலவழித்துக் கொண்டு துயர்  துடைக்கச் செல்கிறார்கள். நம்மில் அதுபோலப் பணத்தையும் நேரத்தையும், குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து விட்டுச்  சமூகப் பணி  செய்பவர்  இல்லையே! இதைக் கூடவா அரசியலாக்க வேண்டும் ? உலகில் குறையே இல்லாதவர்கள்  யார்? புண்ணியவான்களே, தயவு செய்து நிலைமையைப் புரிந்து கொண்டு பேசுங்கள்.

மற்ற நாட்களில்தான் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை. இந்தத் தருணத்திலாவது நமது இலட்சாதிபதிகளும் கோடீசுவரர்களும் மனம் இரங்கி உதவலாம் அல்லவா? உடலை விட்டு உயிர் போகும்போது அவர்கள் சேர்த்து வைத்த  கோடிகள் கூட வரப்போவதில்லை.     இருக்கும்போதே செய்யும் தருமம் தான் அவர்களது தலைமுறையைக்காக்கும். கோடிகளில் புரளும் நமது தொழிலதிபர்களும், திரைப்படத் துறை செல்வந்தர்களும்  , கிரிகெட் ஆட்டக்காரர்களும்,ஊடகங்களும்  மனம் வைத்தால் இடிந்த வீடுகளையும் கோயில்களையும் மீண்டும் புதுப்பிக்கலாம். அதனைப் பொறுப்பான ஒரு அமைப்பு முன்வந்து பொறுப்புடன் செயல் படுத்த வேண்டும்.

பஞ்சாப் ,டெல்லி மாநிலங்கள் தினமும் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை அனுப்புகின்றன. விபத்தில் காயமுற்றோருக்கு மருந்து கம்பெனிகளும்,மருத்துவ மனைகளும் தேவையான மருந்துப் பொருள்களையும் உபகரணங்களையும் தந்து உதவலாம். சுனாமி தாக்கியபோது வீடுகளைக் கட்டித் தந்தவர்கள் இதற்கும் அதே வகையில் உதவி செய்யலாம். சாமானியர்களும் தங்களால் முடிந்த  தொகையையோ, பொருள்களையோ  தந்து உதவ முடியும். இதை எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் சொன்னால் எளிதாக நடைபெற்று விடும். விளம்பரம் பெறும் நோக்கத்தோடாவது உதவி செய்ய முன் வருவார்கள். எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால்  சரி. எதுவும் செய்யாமல் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. பிரார்த்தனையும் முக்கியம் தான். அதோடு உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியம் தானே?

No comments:

Post a Comment