Thursday, April 2, 2015

எது மூட நம்பிக்கை ?

நம்பிக்கைகள் பலவிதம். எதிர்பார்ப்பே நம்பிக்கையின் அடிப்படை தானே !  எதாவது ஒன்றைச் செய்கிறோம். அதற்கான பலனையும் எதிர் பார்க்கிறோம். அப்பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே  ஒரு  காரியத்தைச் செய்கிறோம் !  அது எப்படிப்பட்ட நம்பிக்கையாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றைப் பிறர் செய்யும்போது அதை மூட நம்பிக்கை என்று பழிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கோடை வெய்யிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றிப் போய் விடுகின்றன. சில ஊர்களில் தண்ணீருக்காகத் தொலைவிலுள்ள கிணற்றுக்கோ நீர்நிலைக்கோ சென்று வருகிறார்கள். பெரிய  நகரங்களில் மட்டுமே மக்கள் குடியிருப்புக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வண்டி வந்தவுடன் அதன் பின்னே குடத்துடன் ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கே இத் துன்பத்தின் அளவு புரியும். சில சமயம் நடு நிசிக்கு அப்புறமும் தண்ணீர் லாரிகள் வருவது உண்டு. இரவு தூக்கம் இல்லாமல் அதற்காகக் காத்திருப்போர் எத்தனையோ பேர்!

கிராமங்களிலேயோ தண்ணீருக்குப் படும் பாடு சொல்லி மாளாது. அங்கெல்லாம் தினசரி பேச்சே, மழை எப்போது வரும் என்பதுதான். அதற்காகக் கூட்டுப் பிரார்த்தனைகளை நடத்துவார்கள். சில ஊர்களில் ஊரார் ஒன்று கூடி மழைக்காக வேண்டுவர். அப்படிச் செய்த ஒன்றைத் தான் தொலைக்காட்சியில்  காண நேரிட்டது. ஒரு கிராமத்தில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். கழுதைகள் அலங்கரிக்கப்படுகின்றன. பெண் கழுதைக்கு நெற்றிச் சுட்டியும் உண்டு. அங்கும் ஆண் வீட்டார் பெண் வீட்டார் என இரு தரப்பினரும் சீர் வரிசைகள் கொண்டு வருகிறார்கள். மேளம் முழங்கத் தாலி கட்டப்படுகிறது. நிறைவாக ஒரு முதியவர் சொல்கிறார்: " இது போலத் திருமணம் நடந்தால் நிச்சயம் மழை வரும் என்பது கடந்த கால அனுபவம். வேண்டுமானால் பாருங்களேன், அடுத்த பத்து தினங்களுக்குள் மழை வருகிறதா இல்லையா என்று."  அவரது அனுபவம் பேசியது. அது மட்டுமல்ல. ஒரு ஊரில் தவளைகளுக்குக் கல்யாணம் நடை பெற்றதைக் காட்டினார்கள். கூடவே அவநம்பிக்கைப் பேச்சுக்கள் வேறு. விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைக்கிறார்கள். வானிலை அறிவிப்பிலேயே " மழையை எதிர்பார்க்கலாம் " என்று தானே சொல்கிறார்கள்? நிச்சயமாக இந்த நேரத்தில் இத்தனை அளவு பெய்யும் என்று திட்ட வட்டமாக ஏன் கூறுவதில்லை? அங்கும் எதிர்பார்ப்புத்தான். விஞ்ஞானி நம்பினால் அது எதிர்பார்ப்பு. விவசாயி நம்பினால் அது மூட நம்பிக்கையா? இது என்ன நியாயம் ?

நம்பிக்கை அற்றவர்களுக்கு ஒன்று சொல்கிறோம். உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டால் பரவாயில்லை. ஏதோ ஒன்றைச் செய்தாவது கிராமத்திற்கு மழை வேண்டும் என்ற அவர்களது  நல்லெண்ணத்தைப் பார்க்காமல் அவர்களைப் பழிப்பதிலேயே இருக்கிறீர்களே! அவர்கள் செய்வது என்னவோ வித்தியாசமான செயல் தான். கள்ளமற்ற அந்த நெஞ்சங்களைப் பழிக்கும் நீங்கள் நீர் பற்றாக்குறைக்குத் தீர்வு சொல்லாமல் வேடிக்கை பார்பதாலோ கண்களை மூடிக் கொள்வதாலோ என்ன பயன்? வறண்ட வைகையும், காவிரியும்,பாலாறும், பெண்ணை ஆறும் மணல் படுகைகள்  ஆன பின்பாவது ஏதேனும் செய்ய முடிந்ததா?  மீதமுள்ள மண்ணை அள்ளிக் கொண்டு போவதுதான்  அன்றாடக் காட்சி.  கிராமத்தவர் செய்கைகள் மூட நம்பிக்கைகள் என்றால் , ஒருவேளை,  மழை வந்தால் அது அவர்களது வீட்டுக்கும் நிலங்களுக்கும் மட்டுமா பொழியும்? ஏரி  நிறைந்து குழாய்களில் விடப்படும் நீரை நீங்களும் அனுபவிக்கவில்லையா ?  எதற்கெடுத்தாலும் அடுத்தவனைக் குறை  சொல்வது என்பது சீர்திருத்தமாகாது. தீர்வைச் சொல்லிவிட்டு சீர்திருத்தம் செய்ய வாருங்கள். அதுவரைப் பிறர் மனதை நோக அடிக்க வேண்டாம். 

No comments:

Post a Comment