Wednesday, January 21, 2015

சிவாசார்யர் பற்றாக்குறை

அத்தியாவசியத் தேவைகளுக்கு மேலும் ஆசைப்படும் காலம் இது. அடுத்தவர்களிடம் இருப்பது  எல்லாம், ஏன், அதற்கும் மேலாகவும் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருக்கிறது. உண்ண உணவும், இருக்க வீடும், உடுக்கத் துணியும் இருந்தால் போதும் என்று இருந்தவர்கள் பெற்ற மகிழ்ச்சியைக் காட்டிலுமா நாம் மகிழ்ச்சி அடைந்து விட்டோம்? அந்த அத்தியாவசியத் தேவைகளும் இறை அருளால் கிடைக்கும் என்று உறுதியோடு இருந்தார்கள்.     "இம்மையே தரும் சோறும் கூரையும்" என்கிறது தேவாரம். ஆங்கிலப்பள்ளிக்  கல்விக்கு அடிமட்டத்தில் இருப்பவனும் ஏங்குகிறான். எப்பாடு பட்டாவது கல்விச் செலவை சமாளிக்க முயல்கிறான். எது எப்படிப் போனாலும் பரவாய் இல்லை.என் சொந்த முன்னேற்றம் ஒன்றே முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

அன்னியர் ஆட்சியால் ஏற்பட்ட இம்மாற்றம் தொடர்ந்து பேராசையில் கொண்டு விட்டு விட்டது. போதும் என்ற மனம் வராத நிலை ஏற்பட்டு விட்டது.குறுகிய காலத்திலேயே பணக்காரர்களாக ஆவதற்குக் குறுக்கு வழிகளையும் கையாள ஆரம்பித்து விட்டார்கள்.  கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடி புகுந்தது போக, வெளிநாட்டில் வசிப்பதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.  நிலைமை இப்படி விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கும்போது இதற்கு யார் தான் விதி வில க்காக இருப்பது சாத்தியம் ?  எல்லோரும் சௌகரியமாக இருக்கும்போது நான் மட்டும் கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா எனக்  கேட்க ஆரம்பித்து விடுவர்.

நாகரீகம் இப்படி மாறும்போது, சமயக் கோட்பாடுகள்,பாரம்பர்யங்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவதை நாம் காண்கிறோம். ஆதரிப்போர் இல்லாவிட்டால் ஆலய வழிபாடுகள் பாதிக்கப் படுகின்றன. ஆறு கால பூஜைகள் நடந்தது போய், நான்கு காலமாகி,பிறகு இரண்டு காலமாகித் தற்போது அதமத்திலும் அதமமாக ஒரு காலமாகிப் பூஜைகள் கிராமங்களில் நடைபெறுவதற்கு யார் கவலைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் அந்த ஒரு கால பூஜைகள் செய்யவும் சிவாச்சார்யர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக ஆகி வருகிறது. ஏனையோர் அதை ஏற்றுச் செய்தாலும் எத்தனை ஆண்டுகள் தான் சொற்ப  வருவாயில் பணி ஆற்ற முடியும்? கோயில் நிலங்களின் வருவாய் காலத்திற்கேற்ப அதிகரிக்கும் என்பதால் தான் மானியங்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். இப்பொழுது அதிலும் கை வைக்க ஆரம்பித்த படியால் , யாரும் ஏழ்மையில் வாடிக் கொண்டு பூஜை செய்ய முன் வரத் தயங்குகின்றனர். சிவாசார்யர் பற்றாக்குறையால், பூஜா காலங்களில் கோயில்கள் பூட்டிக் கிடக்கின்றன.

அண்மையில் படித்த ஒரு செய்தியை  இங்கு பகிர்ந்து கொள்ளலாம் எனக் கருதுகிறோம். பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சி பெரியவர்களைத் தரிசிக்க ஒரு சிவாச்சார்யார் வந்தாராம். பொருள் பற்றாக்குறையால்,  தனது  கிராமத்தை விட்டு நகர்ப்புறம் வந்து விட்டதாகப் பெரியவரிடம் அவர் தெரிவித்ததும், மகா சுவாமிகள், " உன்னுடைய ஊரின் பெருமை உனக்குத் தெரியுமா? அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். மறுபடி அங்கே சென்று உன் தகப்பனாருடன் பூஜை செய்துகொண்டு இரு " என்றார்களாம் . இதனை ஏற்ற அந்த சிவாச்சாரியாரும் தனது சொந்த கிராமத்துக்கே திரும்பினார். சில ஆண்டுகள் கழித்து சுவாமிகளைத்  தரிசித்தபோது, தனது கிராமத்துக் கோயில் திருப்பணி ஆகிக் கும்பாபிஷேகம் ஆகி விட்டதாகவும் அதற்குப் பின்னர் நிறைய மக்கள் அங்கு தரிசிக்க வருவதாகவும், அதன் பயனாகத் தனது வருவாய் கூடிவிட்டது என்றும் மகிழ்ச்சியுடன் கூறிய சிவாசாரியார், எல்லாம் பெரியவரின் அனுக்கிரகம் என்றாராம். அதற்குப் புன்னகைத்த பெரியவர், "என் அனுக்ரகம் இல்லை. சிவானுக்ரகம்  என்று சொல்லு" என்று சொல்லி ஆசியளித்து விடை கொடுத்தாராம்.   இதுபோல இப்போது சொல்வதற்கு யாரும் இல்லையா,  அல்லது கேட்பதற்கு யாரும் இல்லையா என்று புரியவில்லை.
  

No comments:

Post a Comment