Friday, September 12, 2014

சிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்?

                                                                                                        படம்: நன்றி,தினமலர்
ஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே  முன்பும்  சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன.  இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு  காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான  ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 இனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள்? ஒவ்வொரு ஆலயமும் தகுந்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.

களவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ  அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா? கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர்? இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.

உற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில்  பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.

அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில்  சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா?

நிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் "கடத்தல் மன்னன் " என்ற பட்டம் தந்து  "கௌரவிக்கிறார்கள்" இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

No comments:

Post a Comment