Friday, July 25, 2014

இராஜேந்திர சோழருக்கு நினைவஞ்சலி

கங்கை கொண்ட சோழபுரம் 
இராஜேந்திர சோழ மாமன்னர் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைத் தமிழ் உலகம் நினைவு கொள்ளக் கடமைப் பட்டுள்ளது. அப்பேரரசர் சிவன் கோயில்கள் கட்டியதும் சோழப் பேராசை விரிவடையச் செய்ததும் பற்றி மட்டுமே நாம் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது பிற குண நலன்களையும் நாம் இத்தருணத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். " தன்  கரங்களால் எல்லா உலகுக்கும் உபகாரம் செய்பவனும்..." என்று கரந்தைச் செப்பேடு இவரைப் புகழ்ந்து உரைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம் கலைமகள் 
திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சூழ்ந்த ஐம்பத்தோறு கிராமங்களைத் தக்கோருக்குத் தானமாகத் தந்துள்ளார் இம்மன்னர்.   1073 பேருக்கு இவர் கொடை அளித்த செய்தியைக் கரந்தைச் செப்பேட்டின் மூலம் அறிகிறோம். சதுர்வேதி பட்டர்களுக்கும், உகச்சர்களுக்கும் நாவிதர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் நில தானம் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிவாலயங்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. திருமழபாடி சிவாலயத்தைப்  புதுப்பிக்கும் பணி கி.பி. 1026 ல்நிறைவு பெற்றது. திருவாலங்காட்டில் கோயில் ஊழியர்களுக்கு வீடு கட்டித் தரவும், நிலத்தைப் பயிரிடவும் உதவப்பட்டது. கல்வி வளர்ச்சிக்காக எண்ணாயிரம் என்ற ஊரில் கல்லூரிக்கு முன்னூறு ஏக்கர் நிலத்தை மானியமாக அளித்துள்ளார் இராஜேந்திர சோழர். மேலும் வேப்பத்தூர்,திருமுக்கூடல், திரிபுவனி ஆகிய ஊர்க் கல்லூரிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான கொடை அளித்துள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரம் - எழில்மிகு நந்தி 
சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உண்டாக்கியும் பூம்புகாருக்கு அருகில் கங்கை கொண்டான் கால்வாய் வெட்டுவித்தும்,சோழபுரத்தில் கன்னி  நங்கை ஏரியை உண்டாக்கியும், மக்களுக்காக நீர்ப்பாசன வசதி செய்துள்ளார். வடமொழியிலும் தமிழிலும் பெரிதும் ஆர்வம் கொண்டவராய் பல புலவர்களை ஆதரித்தார். இளமையில் தன்னை வளர்த்து நற் பண்புகளைப் புகட்டியவரும் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியுமான செம்பியன் மாதேவியார் நினைவாக நாகைக்கு அருகில் செம்பியன் மாதேவி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் அவருக்குப் படிமம் நிறுவி , நிவந்தமும் அளித்துள்ளதால் இராஜேந்திர சோழரின் நன்றி மறவாத பண்பு விளங்குகியது. அது மட்டுமல்ல. தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும்   தானங்கள் செய்து நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார். பிற  சமயங்களையும் போற்றியுள்ளார். இவரது கலை ஆர்வத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பங்களே சான்று. திருக்கோயில் அமைப்பில் புதுமையாகப் பிரதானக் கோயிலருகே அம்பிகைக்குத் தனிச்  சன்னதி கட்டுவித்தார்.
விஜயாலய சோழர் முதல் இராஜராஜ சோழர் வரை தலை நகரமாக தஞ்சை இருந்தது.இவரது காலத்தில் அது கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. தந்தையைப் போலவே பிரம்மாண்டமான சிவாலயத்தை அங்குக் கட்டுவித்தார். திருக்கோயில்களில் ஒதுவார்களும், இசைக்கருவி வாசிப்போர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆடல், ஓவியம்,சோதிடம்,வான நூல், மருத்துவம். மல்யுத்தம், சமையல், அணிகலம் செய்தல் போன்ற கலைகள் ஊக்கம் பெற்றன.

இவரது காலத்திய ஊராட்சி முறை பாராட்டுக்குரியது. சொந்த வீடும், அரைக்கால் வேலி  நிலம் மட்டுமே  உடையவர்களும், அறவழியில் பொருள் ஈட்டியவர்களும் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் மட்டும்  ஊராட்சி உறுப்பினராகத் தகுதி உடையவர்கள். லஞ்சம் வாங்கியவர்கள்  உறுப்பினராகும் தகுதியை இழந்தார்கள். குடவோலை முறைப்படி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். நேர்மை அற்றோர் தண்டிக்கப்பட்டனர்.

மானம்பாடி- நாகநாத சுவாமி சன்னதி  
கடாரத்தையும்,கங்கையையும்,ஈழத்தையும் வென்ற இம்மாமன்னர் மா வீரர் மட்டுமல்ல. மாமனிதராகத் திகழ்ந்தார் என்பதை நினைவு கூறவே ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டோம். மக்கள் பணியும் மகேசன் பணியும் கண்ணெனக் கொண்டு ஆண்ட இராஜேந்திர சோழரை நாம் இப்போது எவ்வாறு நினைவு கூர்கிறோம் தெரியுமா? கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியிடுதல், சொற்பொழிவு ஆற்றுதல் இப்படிப் பலப்பலவற்றை இரண்டு தினங்கள் நடத்துகிறார்கள். இதற்காகும் செலவு 25 லட்சம் என்று சொல்லப்படுகிறது. அரசு இதில் பங்கேற்பதாகத் தெரியவில்லை.

இவ்வளவு பெரிய தொகையை அம்மாமன்னர் எவ்விதம் நடந்து காட்டினாரோ அவ்வழிகளில் செலவிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும்? அவர் கட்டிய கோயில்களைப் புனரமைத்தல், ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு உதவுதல் பல்கலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் , அவரை நினைவு படுத்தும் போது அவரது நற்பண்புகளில் சிலவாவது நமக்கும் வர எதுவாக இருக்கும்.

              மானம்பாடி சிற்பம் 
குடந்தைக்கு அருகிலுள்ள மானம்பாடி சிவாலயத்தைச் சென்று பாருங்கள். எவ்வளவு ஆண்டுகளாக அது சிதைவதை அரசும் மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். கலைச் சின்னமாகத் திகழும் இந்த ஆலயத்தை தேசீய சாலை அமைப்பவர்கள் சென்ற ஆண்டு இடிக்கவும் நினைத்தார்கள். அவ்வளவு தூரம் இருக்கிறது நாம் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைப் போற்றும் லட்சணம்!  ஒரு வழியாக நல்லோர் சிலரின் முயற்சியால் இக்கோயிலைத் திருப்பணி செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது முழுமையாக நிறைவேறும் காலம் தான் தெரியவில்லை!  இதுபோல எத்தனையோ கோயில்கள் பராமரிப்பின்றி மரங்களால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

மாமன்னர் ராஜேந்திர சோழரது பள்ளிப்படைவீடு பிரம தேசம் என்ற ஊரில் பாழடைந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது. தொல்பொருள் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. நாளடைவில் பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், வெறும் சொற்பொழிவோடும் மலர் வெளியீட்டோடும் அவை நின்றுவிடக்கூடாது. மக்களும் அரசாங்கமும் நமது கலைச் சின்னங்களை அழிய விடக்கூடாது. வாய்ப்பேச்சாலும் கட்டுரைகள் எழுதியும் சாதிப்பதை விடக் களத்தில் இறங்கிப்  பணியாற்றுவதே அம்மாமன்னருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவஞ்சலி.  

1 comment:

  1. சோழ மன்னர்கள் வழியில் .....நற்பண்புகளை அடைய வழி காட்டியதற்கு ...நன்றி

    ReplyDelete