Friday, November 1, 2013

வாழ்வு வளம்பெற வடவம்பலம் வாருங்கள்

தேசீய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் பயணிப்போர்களுக்கு சில சமயங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும். சாலை விபத்துக்கள், பயணிக்கும் வாகனம் நடுவழியில் நின்று விடுதல் போன்ற எவ்வளவோ சோதனைகள் , வேதனைகள்....  ஆனால் விக்ரவாண்டியிலிருந்து பண்ருட்டி,வடலூர் மார்க்கமாகக் கும்பகோணம் செல்லும் பாதைக்கு மட்டும் எப்போது விமோசனம் கிடைக்குமோ தெரியவில்லை! வழி நெடுகிலும் சுங்கச் சாவடிகள் நம்மைப் பிழிந்து எடுத்து விடுகின்றன. குறிப்பிட்ட காலம் ஆன பிறகும் சில இடங்களில் வசூல் செய்கிறார்கள். கேட்பதற்கு நாதி இல்லை! அதிலும் விக்கிரவாண்டி சாவடியில் கார்களுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு எழுபது ரூபாய் வசூலிக்கிறார்கள். இதை எல்லாம் பத்திரிகைகள்தான் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். விக்கிரவாண்டி சாவடியை சாமர்த்தியமாக,த் தஞ்சை செல்லும் பிரிவுப் பாதைக்கு முன்பாக அமைத்திருக்கிறார்கள். இத்தனை வரியையும் வழி நெடுகிலும் செலுத்தி விட்டு, தஞ்சைச் சாலையில் நுழைந்தால் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கும்! NH 45 C  என்று குறிக்கப்படும் இச் சாலை , வடலூர் வரை பல்லாங்குழியாகக் காட்சி அளிக்கிறது. பெரிய பள்ளங்களில் ஏறி இறங்கி வாகனங்கள் செல்வதைப் பார்க்கும்போது, இவ்வளவு அலட்சியமும் எங்கிருந்து அதிகாரிகளுக்கு வருகிறது என்று நினைக்கத் தோன்றும். எப்போதாவது பயணிப்பவர்களாவது சபித்துக் கொண்டே சென்று விடுகிறார்கள். ஒரு நாளில் பலமுறைகள் பயணிப்போர்களையும்  அரசுப் பேருந்துகளை ஓட்டுபவர்களையும்  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.  கொஞ்சம் நகர்ந்தால் வயலிலோ ஆற்றிலோ தலை குப்புற விழ வேண்டியது தான். டயர்கள் பஞ்சர் ஆவதும் வெடித்து விடுவதும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த தேசீய சாலையில் பயணித்தால் ஒரு வழியாக கோலியனூர் கூட்டு ரோடை அடையலாம். இங்கு இடப்புறம் (கிழக்கே) திரும்பினால் பாண்டிச்சேரியும், வலப்புறம் (மேற்கே) திரும்பினால் விழுப்புரமும் நேராகத் (தெற்கில்) சென்றால் பண்ருட்டியும் வரும். இந்த இடத்திலிருந்து பண்ருட்டி சாலையில் சுமா நான்கு கி. மீ. சென்று, இடது புறம் திரும்பினால் வடவம்பலம் செல்லும் சாலையை அடையலாம். நெடுஞ்சாலையில் தகவல் பலகை அமைத்திருக்கிறார்கள். இந்த சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் சாலையை ஒட்டியபடி, ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதைக் காணலாம்.

இந்த இடத்தில் தான் ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடத்தின்  58 வது ஆச்சார்யாராக 52 ஆண்டுகள் இருந்த ஸ்ரீ  ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்திருக்கிறார். இந்த இடத்தைக் காஞ்சி மகா  பெரியவர்கள்  கண்டு பிடித்ததே அதிசயமான ஒரு நிகழ்ச்சி. அதுவரையில் அந்த இடம் யாருக்கும் தெரியாமல் வயல் வெளிகளுக்கு இடையில் இருந்தது. இப்போழுதும்கூட, வயலுக்கும் சாலைக்கும் இடையில்தான் இருக்கிறது. அங்கு சென்ற பெரியவர்கள் குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் என்பவரை அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்குமாறு சொன்னார்கள். அப்படித் தோண்டும்போது, சாஸ்திரிகள்  மயக்கம் அடைந்து விட்டார். பிறகு சுய நினைவு பெற்றவுடன் தான் கண்ட காட்சியை விவரித்தார். ஒரு சந்நியாசியின் வடிவையும், அவரைச் சுற்றிலும் பண்டிதர்கள் வேதம் சொல்லிக் கொண்டிருந்ததையும் தான் கண்டதாக அவர் கூறினார்.  அந்த இடம் தான் சுவாமிகள் ஸித்தி அடைந்த இடம் என்று தீர்மானிக்கப்பட்டு, அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்தது, 1927 ம் வருடம்,ஜனவரி 17 ம் தேதி. பின்னர், 1981 ம் வருடம்  ஜனவரி 17 ம் தேதி ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தேறியது.

விருத்தாசலத்தில் விச்வமுகி என்பவருக்குக் குமாரராக ஸ்ரீ  ஆத்ம போதேந்திரர் அவதரித்தார். அவரது இயற்பெயர்  விச்வேச்வரர் என்பது. இந்திய நாடு முழுவதும் யாத்திரையாகச் சென்றுள்ள இம்மகான் , ஸ்ரீ ருத்ர பாஷ்யம் இயற்றியுள்ளதோடு,  சதா சிவ ப்ரம்மேந்திரரை  குரு கிரந்த மாலை இயற்றும்படிப் பணித்து அருளினார். போதேந்திரருடன்  ராமேஸ்வர யாத்திரை செய்ததாகச்  சொல்லப்படுகிறது. காசியிலும் நெடுங்காலம் தங்கியிருந்தார்கள்.நிறைவாகத் தக்ஷிண பினாகினி என்று வடமொழியில் அழைக்கப்படும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள வடவம்பலத்தை அடைந்து, சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டே  ஈச்வர வருஷம் (1638) துலா (ஐப்பசி) மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று ஸித்தி அடைந்தார்கள்.

அமைதியாக வயல் அருகில் தோற்றமளிக்கும்  அதிஷ்டானம் மன  அமைதியை வாரி வழங்குவதாக அமைந்திருக்கிறது. ஸ்ரீ  ராஜ சேகர சர்மா என்பவர் ( 04146- 236410 ; 09442068232) இங்கு பூஜைகளைச் செய்து வருகிறார்.    பிருந்தாவனத்தருகில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சுவற்றில் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு எழுதப்பட்டுள்ளது. வடவம்பல வாசிகள்  கொடுத்து வைத்தவர்கள். இழந்த செல்வத்தை மீண்டும் திரும்பப் பெற்றது போலத்தானே இதுவும்! அதற்கு மூல காரணராக இருந்த காஞ்சிப் பெரியவர்களின் குரு பக்தியை என்னென்பது! இவ்விரு ஆச்சார்யர்களின் அருளால் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் பெற நாமும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment