Sunday, August 11, 2013

பிரதோஷ வேளையில் அன்ன தானமா?

ஆன்மீக வளர்ச்சியில் ஆன்மீகப் பத்திரிகைகளுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். பல கோயில்களின் இருப்பிடமே தெரியாதவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவை அமைகின்றன. மேலும் பல ஆலயங்களின் திருப்பணிகள் துவங்கவும் எழுச்சியை ஏற்படுத்த முனைகின்றன. திரும்பிப் பார்க்கவே ஆள் இல்லாத நிலை மாறி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. பரபரப்பாகவும்,வித்தியாசமாகவும் எழுத வேண்டும் என்ற வகையில் ," ஊருக்கே படி அளக்கும் ஈசன் ஓலைக் குடிசையில் இருக்கலாமா ? "  " சிலிர்ப்பூட்டும் சிங்காரவேலர் " போன்ற தலைப்புக்களைக் கொடுக்கிறார்கள். பிரபலங்களின் பூஜை அறையையும் விட்டு வைப்பதில்லை. ( இதற்கும் பிரபலம் ஆக வேண்டியது முக்கியம் போல் இருக்கிறது! ) பல சமயங்களில் கற்பனா சக்தி என்னும் குதிரையையும் தட்டி விடுகிறார்கள். ஒரு பிரபலத்தை விட்டுக் கேள்வி பதில் பகுதியில் புரட்சிகரமான விளக்கம் வேறு! சிறிது நாட்கள் கழித்து அது புத்தகமாக ஆக்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் ஜோதிடப் பகுதி இல்லாவிட்டால் எப்படி ? அதுவும் கூடவே தரப்படுகிறது.

 என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் பக்கத்தை நிரப்புவது என்ற நிலை மாத்திரம் வந்து விடக்கூடாது. ஒரு சிலர் மட்டுமே எழுத வேண்டும் என்பது வேண்டுமானால் அவர்களது பத்திரிகை தர்மமாக இருக்கலாம். அதே நேரத்தில், தவறான செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற உண்மையான பத்திரிகை  தர்மமும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா?  ஒருவேளை, தவறான செய்தி வெளியிடப்பட்டு, அதை வாசகர் யாராவது சுட்டிக்காட்டினால் அந்தத் திருத்தத்தை அடுத்த இதழிலேயே வெளியிடவேண்டும் என்ற பெருந்தன்மை எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கின்றன?

தக்ஷிணாமூர்த்திக்கும் நவக்ரஹத்தில் ஒருவரான குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மஞ்சள் வஸ்திரமும் கொண்டைக் கடலை மாலையும் தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளின் பரிந்துரை வேறே!

நவக்கிரகங்கள் வழிபட்ட நலம் தரும் கோயில்களைக் குறிப்பிடும்போது சனீஸ்வரன் கோயில், குரு ஸ்தலம் என்றெல்லாம் தலைப்புக் களைத் தந்து மக்களைக் குழப்புகிறது பத்திரிகை உலகம். சனைச்சரன் (மெல்ல  சஞ்சரிப்பவன்) என்ற பெயரை சனீஸ்வரன் ஆக்கி, ஈஸ்வர பட்டம் பெற்றதாகக் கதையும் எழுதி விடுகிறார்கள்.

பழைய விக்கிரகங்களில் புள்ளிகள் காணப்படுவது இயற்கையே. ஒரு ஊர்க் கோவிலில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய விக்கிரகத்தில் இவ்வாறு இருந்ததை, அவர் அங்கு வந்தபோது அம்மை நோய் தாக்கியதால் ஏற்பட்ட வடுக்கள் என்று குருக்கள் சொன்னதாகத் திருத் தலங்களை யாத்திரை செய்த ஒருவர், வார பத்திரிகை ஒன்றில்  எழுதினர். அது தவறு என்று சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ள முன் வரவில்லை. மக்களுக்குத் தவறான தகவல் போனது போனதுதான்!

இதேபோல் மற்றொரு பத்திரிகையில் சிறுத்தொண்ட நாயனார்,  தான் செய்த செயற்கரிய செயலைப் பிறர் செய்ய முடியாது என்று அகம்பாவம் கொண்டதாகத் தான் கேள்விப்பட்ட தகவலை அப்படியே வெளியிட்டிருந்தார் பத்திரிகை ஆசிரியர். பெரிய புராண ஆதாரம் காட்டி அதை மறுத்து எழுதியும் பலன் இல்லை.

பிரதோஷ மகிமையைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டு எத்தனையோ பேர் அன்றைய தினம் சிவாலயங்களுக்குச் செல்கிறார்கள். ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி எல்லா உலகங்களையும் காப்பாற்றிய நாள் ஆதலால் , அன்று உபவாசம் இருந்து, சிவ பூஜை செய்வதும்  சிவாலய வழிபாடு செய்வதும்  முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருநாள் மாலை நேரமும் வரும் நித்திய பிரதோஷ வேளைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது வழக்கம். இப்படி இருக்கும்போது, அந்த வேளையில் பல கோவில்களில் அன்ன தானம் செய்யப்பட்டு வருகிறது! பத்திரிகைகளும் இதற்குத் தூபம் போடுவதைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. கையில் பிரசாதம் கொடுப்பது , தொன்னையில் தருவது , அன்னதானம் செய்வது போன்றவற்றை உபவாச தினங்களில் செய்வதைத் தவிர்க்கலாமே!  அன்ன தானத்திற்கு ஈடு இணை இல்லைதான். அதையும் முறையாகச் செய்தால் உரிய பலன் கிடைக்கும் அல்லவா? " பிரதோஷ வைபவத்தின் போது அன்னதானமாக வழங்க வழங்க நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும்." என்று அர்த்தமற்ற முறையில் தவறாக விளக்கம் தரப்பட்டுள்ளது ஒரு ஆன்மீகப் பத்திரிகையில்! பத்திரிகை ஆசிரியர்  ஆன்மீகத்தில் தோய்ந்தவராக இருந்தால் இத்தகைய தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. எழுதத் தெரிந்து விட்டால் மட்டும் போதும் என்பது கதைகள் எழுதுபவருக்கு மட்டும்தான்.  காரணம் என்ன என்றால் , அதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் ஆன்மீகக் கட்டுரை எழுதும்போது, தவறில்லாமல் தகவல் தரப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்வதே  சிறந்த பத்திரிகைக்கான  அடையாளம்.

3 comments:

  1. பத்திரிக்கைகள் சரியான தகவலகளைத் தரவேண்டியது அவர்களது கடமையும் ஆகும்.

    நமச்சிவாய

    அன்புடன்,
    கணேஷ்

    ReplyDelete
  2. Namaskaram Ayya,
    I'm very happy to know a great Siva Bhaktan like you.The service you are doing to Lord Siva through your blogs are great.As you have clearly pointed out eating is one of the things prohibited during pradosha.It is sad that most are not aware of this.It is also wrong to refer to Sthalas where Navagrahas worshipped Siva as Navagraha sthalas.These are Sivasthalams.Sad to see that people who visit these sthalas focus on the Grahas rather than the Lord Who blessed them.Gurukkals also seem to encourage this practice.Worse they propagate stories like Siva being caught by Sani which is not found in any puranas.Happy to see that there are enlightened souls like you.Namasivaya.
    With regards,
    Chandran

    ReplyDelete
  3. Namaskaram Ayya,
    I'm very happy to know a great Siva Bhaktan like you.The service you are doing to Lord Siva through your blogs are great.As you have clearly pointed out eating is one of the things prohibited during pradosha.It is sad that most are not aware of this.It is also wrong to refer to Sthalas where Navagrahas worshipped Siva as Navagraha sthalas.These are Sivasthalams.Sad to see that people who visit these sthalas focus on the Grahas rather than the Lord Who blessed them.Gurukkals also seem to encourage this practice.Worse they propagate stories like Siva being caught by Sani which is not found in any puranas.Happy to see that there are enlightened souls like you.Namasivaya.
    With regards,
    Chandran

    ReplyDelete