Sunday, July 28, 2013

ஆலயப் புனிதம் காப்போம்

இறைவன் உறையும் இடம் என்ற எண்ணம் வந்தவுடன் நம்மை அறியாமலேயே கைகள் கூப்பி அஞ்சலி செலுத்தியவாறே ஆலயத்திற்குள் நுழைகிறோம். அதற்கு முன்பாக வெளியில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்கிறோம். சில கோவில்களில் கை-கால்களை நீரால் சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும் வசதியும் இருக்கிறது. பயபக்தி எப்பொழுது குறைகிறதோ அப்போது அலட்சியமும் அகம்பாவமும் தலை தூக்குகின்றன.

பல கோவில்களில் நிர்வாக அலுவலகம் உள்ளே இருக்கிறது. அதில் பணி செய்பவர்கள் அலுவலக வாயில் வரை காலணிகளை அணிந்து செல்கிறார்கள்!இரண்டு சக்கர வாகனங்களும் கூடவே உள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது.கோபுர வாயில் வழியே நுழைந்து, முடிந்த வரையில் உள்ளே செல்லுவதற்கு ஆட்டோக்களும் அனுமதிக்கப் படுகின்றன.சிதம்பரம் போன்ற பெரிய கோவில்களில் ஒரு வீதியிலிருந்து மறு வீதிக்குச் செல்லும் பிற மதத்தினர்கள் கூடத் தங்கள் காலணிகளைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வெளிப் பிராகாரத்தின் வழியாகச் செல்வதைக் காணும் போது, நம்மவர்கள் காலணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் கண்டால்  வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.அன்பர் சிவகுமார் அவர்கள்,  தான் கண்ட காட்சியைப் புகைப்படம் எடுத்து அனுப்பித் தன் ஆதங்கத்தைத்  தெ ரியப்படுத்தி  இருந்தார்கள்.  இதுபோலக் கவலைப் படுபவர்கள் மிகச் சிலரே!

சுத்தம்,சுகாதாரம் பற்றி அக்கறை உள்ளவர்கள் கோவில்களுக்கு உள்ளேயும் வெளியிலும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமே! வழிபாட்டுக்கு உரிய இடம் என்பது ஏனோ பலருக்கு மறந்து விடுகிறது போல் இருக்கிறது. அடிப்படையான பக்தி இல்லாவிட்டால் இப்படித்தான்! எதையும் செய்யத் துணியும் திமிர் வந்துவிடுமோ என்னவோ. கேட்பதற்கு யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் இப்படிப் பல அத்துமீறல்கள் நடக்கின்றன. கோவிலுக்கு வெளியிலாவது, மற்றவர்களும் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால், உள்ளேசெல்லும் பக்தர்களுமா இப்படி?

ஆலயத்திற்குள் செய்யத்தகாதவை இவை என்று பட்டியலிட்டுப் பல கோவில்களில் பலகை அமைத்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வழிபாட்டை முறைப்படி செய்ய வேண்டியவற்றையே வலியுறுத்துவதாக இருக்கும். நினைக்க முடியாத செயல்களையும் மக்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்காததால் பட்டியலில் அவற்றைக் காண முடியாது.

திருவிழாக் காலங்களில் வருபவர்கள் செய்யும் செயல்களை எழுதவே கை கூசுகிறது. உள்ப்ராகாரங்கள் தவறாகப் பயன் படுத்தப் படுகின்றன. அதனால் எழும் துர்நாற்றம் சகிக்க முடியாமல் வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கூடவா கண்காணித்துத்  திருத்த வேண்டும்? பஸ் நிலையங்களில் தான் இந்த நிலை என்றால் கோயில்களிலும் கூடவா? மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்த லட்சணத்தில் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் வேறு! முதலில் கோவில்களின் புனிதத்தைக் காக்க முன் வரட்டும். சட்டையைக் கழற்றிவிட்டுப் பயபக்தியுடன் கோவிலுக்குச் செல்லும் மலையாளிகள் எங்கே; நாம் எங்கே! நமக்கு வேண்டியதெல்லாம் உரிமையும் மரியாதையும் மட்டுமே! இப்பொழுது மட்டும் என்னவாம்! நந்தியைக் கட்டிக் கொண்டு ரகசியம் பேசுகிறார்கள்.தாங்களே மாலை அணிவிக்கிறார்கள். தீபம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும்போது தட்டுக் காசு கண்ணை உறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. தட்டு வருமானம் இல்லாத கோயில்களுக்கு எத்தனை பேர்  போவார்களாம்? பலிபீடத்தில் அகந்தையைப் பலியாக்கிவிட்டு நுழையாதவரை இப்படிதான்.இத்தனைக்கும் மூல காரணம் , ஆலயத்தின் புனிதத்தை நாமும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான்!  

No comments:

Post a Comment