Thursday, May 9, 2013

டெண்டரோ டெண்டர்


இந்து சமய அறநிலையத் துறை, ஆலய வருவாயைப் பெருக்க எத்தனையோ வழிகளைக் கையாளுகிறது. இதனால்,சம்பந்தப்பட்ட  ஆலயம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது வேறு விஷயம். பலதரப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப் படுவதையும், அவற்றை உயர்த்தியுள்ளதையும் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம். ஒரு கோவில் பிரபலமாகிவிட்டால் போதும்! கட்டணப் பட்டியல் பின்னாலேயே தொடர்ந்து வரும்!

சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் உள்ள சிவாலயம்,திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமலும்,பனை மரங்கள் சூழப்பெற்றும் அமைதியாக விளங்கியது. சிறு சந்துகள் மூலம் விசாரித்துக் கொண்டேதான் கோவிலை அடைவது வழக்கம். (இப்போதும் குறுகிய சாலை மூலம் தான் கோயிலை அடைகிறோம்!) அந்நாட்களில் திருவலிதாயம் என்று அழைக்கப்பட்ட பாடியை, பாடல் பெற்ற தல யாத்திரையாக வருபவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருவர்.
நாளடைவில் காலனிகள் பெருகவே, மக்கள் அதிகமாக வரலாயினர். குரு ப்ரீதி தலம் என்று சொன்னவுடன், பரிகாரம் செய்துகொள்பவர்களும் வரத் தொடங்கி விட்டனர். இப்போது பார்த்தால், கோ சாலை ஒரு பக்கம்; பிராகாரத்தில் புறாக்களுக்குத் தீவனம் இடுவோர்  ஒரு பக்கம்; புதியதாகக் கட்டப்பட்டுள்ள குருவின் சன்னதியில் நிற்பவர்கள் ; இப்படிப் பலதரப்பட்ட வகையில் மக்கள் கூடுகின்றனர். வருமானமும் நாளடைவில் பெருகும் வாய்ப்பும் இருக்கிறது.

இதற்கிடையில், டெண்டர் அறிவிப்பு வேறு; கோயில் சன்னதி தெரு விசாலமானது. எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இரு புறமும் வாகனங்களை நிறுத்த முடியும். அப்படி இருந்தும், இதற்குக் குறைந்தது ரூ 246000 க்கான டெண்டர் வரவேற்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு முன்பே, ஒருவர்,ரசீது புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். ரூ 10,20,25 என்று ஒவ்வொரு காருக்கும் வசூலிப்பார். கேட்டால்,டெண்டர் எடுத்திருக்கிறேன் என்பார். இது,மக்கள் அதிகமாக வருகை தரும் எல்லாக் கோயில்களிலும் அன்றாடம் காணும் காட்சி தான்!

மயிலை கபாலீஸ்வரர் ஆலய வடக்கு மாட வீதியில் சென்னை கார்பரேஷன் ,வாகன நிறுத்தத்திற்காக வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ 5 மட்டுமே. அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வசூலிக்கப்படுவது ரூ 25 ! டெண்டர் தொகையை லட்சக் கணக்கில் வாங்குவதால், கட்டணங்கள் இவ்வாறு கண்மூடித்தனமாக வசூலிக்கப் படுகின்றன. அர்ச்சனை பொருள் விற்க டெண்டர் தொகையாக, ரூ 267000 அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ச்சனை செய்பவர்களுக்கு, இரண்டு காய்ந்த வெற்றிலையும், இரண்டு உபயோகமற்ற பாக்குகளும் ,மெலிந்த இரு வாழைப் பழங்களும், குரும்பை போன்ற தேங்காயும், ப்ளாஸ்டிக் பேப்பரில் சுருட்டப்பட்ட கற்பூரமும் ரூ 25 க்குத் தலையில் கட்டப்படுகிறது. பாவம் பக்தர்கள் மட்டுமல்ல. அந்த இறைவனும் கூடத்தான்!

இவைதவிர, சமயப்புத்தக விற்பனைக்  கடைக்கு ரூ 135000, பிரசாத(??) க் கடைக்கு ரூ 75000, நெய் தீபத்திற்கு ரூ 168000 என்று, டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.நல்ல வேளை ! புறாத் தீவனக் கடைக்கு உரிமை வழங்கி,டெண்டர் கோரப் படவில்லை.(அதிலும் வியாபாரம் அமோகமாக இருக்கக் கூடும்) இவை எல்லாம் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டுமே சாத்தியம்.  பாடியிலேயே நிலவரம் இப்படி என்றால், பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற தலங்களில் நிலை எப்படி இருக்கும்? இப்படி வசூலாகும் பல்வகைக்கட்டணங்களும்,உண்டியல் வருமானங்களும் பல கோடிகள் சம்பாதித்துத் தரும்போது அது எவ்வாறு முறைப்படி செலவழிக்கப்படுகிறது என்று சொல்பவரைக் காணோம். ஆண்டுத் தணிக்கை நடப்பது                  என்னவோ உண்மைதான். அதன் விவரம் அந்த அந்தக் கோவிலின்  அறிவிப்புப் பலகையில் பக்தர்கள் பார்வையில் படும்படி செய்யலாமே!

டெண்டரில் இத்தனை தீவிரம் காட்டும் அறநிலையத்துறை, கோவில் குத்தகை வசூலிலும், நிலங்களை மீட்பதிலும், கோவில் வீடுகளிலிருந்து முறையான வாடகை வசூலிப்பதிலும், கோவில் சொத்துக்களைத் தன் பெயரில் பொய் பட்டா மூலம் மாற்றுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பதிலும் தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்குச் சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைப் போலி ஆவணங்கள் மூலம் விற்றதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. சர்ச்சைக்குரிய நிலங்களுக்கும் கட்டிடங்களுக்கும் மின்சாரம்,தண்ணீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படவேண்டும் என்று பத்திரிகைகள் எழுதியும் பலன் இல்லை. இவற்றை மீட்டால்,டெண்டர்  விட்டு மக்களை  அச்சுமையைத் தாங்கச் செய்ய வேண்டிய நிலை இருக்காது

யார் காதில் விழப்போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment