Monday, May 27, 2013

தமிழ் ஞானசம்பந்தர்

முன்பெல்லாம் "தமிழ் " என்ற சொல்லில் வரும் ழகரத்தை  ளகரமாக உச்சரிப்பதைப் பார்த்திருக்கிறோம். வாழைப்பழத்தை வாளைப்பழம் என்றே சொல்வார்கள். இம்மொழியிலோ , ழகர, ளகர,ணகர ப்  பயன்பாடுகள் அதிகம். மாறாக உச்சரித்தால் காதுகளை மூடிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. சிறு வயது முதலே ஆசிரியர்களோ,பெற்றோர்களோ இக்குறையை சரி செய்ய முன்வருவதில்லை. ஒருவேளை,இப்படிப் பேசுவதை எல்லோரும்  வித்தியாசமாகக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறார்களோ என்னவோ!

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால் கெளரவம் என்று கூடச் சிலர் பேசியதைக் கண்டிருக்கிறோம். "பட்" ஆனால் என்று ஆரம்பிப்பர். இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே! பிறகு வந்தது யதார்த்தம் என்ற சொல்லைத் தேவை இல்லாத இடங்களில் எல்லாம்  உப யோகிப்பது. தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போதே, "அண்ட்" என்று இடையில் பேசுவது

தூர் தர்ஷன் தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் செய்திகளை வாசிப்போரது உச்சரிப்பைக் கேட்டுப் பலரும் பாராட்டியதுண்டு. இப்பொழுது செய்தி வாசிப்போர்களது உச்சரிப்பைக் கேட்டால் ஏன்தான் தமிழ் இவர்களிடம் இந்தப் பாடு படுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

 " அவரவர்கலது பல்லிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கலிடம் சென்று மதிப்பென் க லைப் பெற்றுக் கொல்லுமாறு கேட்டுக்  கொல்லப் படுகிறார்கல். "  என்று செய்தி வாசிக்கப்படுகிறது. இவ்வாறு நம்மைக் கொல்கிறார்கள்.

பக்திப் பாடல்களைப் பாட எது மிகவும் முக்கியம் என்று கேட்டால் . நல்ல குரல் வளம் என்று சொல்வதை விடப் , பிழை இல்லாத உச்சரிப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. "வேயுறு தோளி பங்கன் " என்பதை, "வேயுறு தோலி" என்று உச்சரித்தால் என்ன செய்வது!

ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால், "இப்ப பாத்தீங்கன்னா.." என்று சொல்வது "லேடஸ்ட் பாஷன்" என்கிறார்கள்!  " பார்த்துக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தை கொச்சையாக, "பார்த்துக்கங்க" என்று இருந்தது போக, "பார்த்துகோங்க" என்று பேசப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனையோ மாற்றங்கள்/அபத்தங்கள்.

செம்மொழி என்று கௌரவமாகச் சொல்லிக் கொள்வது இருக்கட்டும். எத்தனை பேர் அதை "செம்மொளி" என்று உச்சரிக்கிறார்கள் என்பதைக் காணும்போது வேதனையே மிஞ்சும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துவிட்டு வெளியில் வந்தவர்கள் எத்தனை பேர் தவறில்லாமல் எழுதுகிறார்கள்?

 பக்தி இலக்கியங்களைப் பள்ளிப் பாடங்களிலிருந்து ஓரம்  கட்டி, நேற்று எழுதப்பட்ட கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது போக, தமிழ் படிப்பதே தவிர்க்கப்படுமோ என்று அஞ்ச  வேண்டியிருக்கிறது. இவ்வளவும் தெய்வத் தமிழைப் புறக்கணித்ததால் வந்த வினை. இரண்டாயிரம் ஆண்டுகளாக பக்தி மற்றும் நீதி இலக்கியங்களில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ், பள்ளிகளிலாவது கட்டாயப் பாடமாகப் படிக்கப்படக் கூடாதா? தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தனது ஆயுளில் ஒரு முறையாவது திருக்குறளையும் , தேவார திருவாசகங்களையும், நீதி நூல்களையும் இனி எப்படிப் படிக்கப் போகிறான் என்பதே கேள்விக் குறி ஆகி விடும் போல் இருக்கிறது.

கேட்டால் , நாங்கள் தான் தமிழின் காவலர்கள் என்று பலரும் சொல்லிக் சொல்கிறார்கள். உண்மை நிலை மாறாக இருக்கும்போது, தமிழ் செய்தித் தாள்களும், திரைப் படங்களும் மட்டுமே மிஞ்சுமோ எனத் தோன்றுகிறது. இதைத் தான் "தமிழ் இனி மெல்லச் ....." என்று      குறிப்பிட்டார்களோ?

பலருக்குத் தனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது என்று பெருமிதம் வேறு! (உதாரணம்: தமிழ்ச் செல்வி,தமிழரசன் ....) அதனால் மட்டுமே  அந்த நபரால் தமிழ் நாடு பயன் அடைந்து விடுமா? தனது பெயரோடு தமிழையும் சேர்த்துக் கொண்டு, "தமிழ் ஞானசம்பந்தன்" என்று பாடினார், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய" திருஞானசம்பந்தப் பெருமான்.   சமண-பௌத்த மதங்கள் ஓங்கியிருந்த காலத்தில் சம்பந்தப் பெருமான் அவதரித்து, சைவத்தை நிலை நாட்டியதோடல்லாமல் அவரது திருவாக்கால் தமிழையும்  ஏற்றம் பெறச் செய்தார்.அவரது குருபூசைத் திருநாளாகிய இன்று (வைகாசி மூலம்) அவரது மலர்ச் சேவடிகளை வணங்கி, "இருந்தமிழ் நாடு உற்ற இடர் நீங்க " அருள வேண்டும் என்று பிரார்த்திப்போமாக. 

No comments:

Post a Comment