Friday, March 8, 2013

எது முக்கியம்??


திருவிளக்கு பூஜைகள் கோவில்களில் நடைபெறுவது என்னவோ சமீப காலத்ததாக இருக்கலாம். இதுபோல் ராகு கால துர்க்கை  பூஜை, குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்- கொண்டைக் கடலைமாலை சார்த்துதல்,ராகுகால சரபர் அர்ச்சனை, கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று பைரவர் பூஜை , ஆகியனவும் அண்மையில் சேர்ந்தவை தான் என்றாலும், இப்படியாவது மக்கள் கோயில்களுக்குச் செல்கிறார்களே என்று நினைக்க வேண்டுமே தவிர, ஏது சரி ஏது தப்பு என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. குறைகளை மன்னித்துத் தினை அளவாவது நிறை இருந்தால் இறைவன் அதை மகிழ்ந்து ஏற்பான். இதைத்தான் சம்பந்தரும் , "குறை உடையார் குற்றம் ஒராய் கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்று பாடுகிறார். தவிரவும், எத்தனை நியமமாகப் பூஜை செய்தாலும், குறைகள் இருக்கவே செய்யும். அதற்காகத்தான், பூஜை முடிவில், நியமலோபம், கால லோபம், ஸ்ரத்தா லோபம் ஆகியவற்றிற்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டப்படுகிறது.

லக்ஷார்ச்சனை என்பது நெடுங்காலமாகச் செய்யப்பட்டு வருவது. சகஸ்ர நாமத்தால் செய்யப்படும் அர்ச்சனை லக்ஷம் நாமாக்கள் ஆவதற்குப் பொதுவாகப் பத்து தினங்கள் அன்பர்களின் ஆதரவோடு செய்யப்படுகிறது. இதுவும் பெரும்பாலும் பெரிய ஊர்களில் பக்தர்களின் ஆதரவுக்கேற்ப நடக்கிறது. ஏக தின லக்ஷார்ச்சனை என்பதே பெரிய விஷயம். அதைவிடச் சிறந்த வகையில் ஏக கால லக்ஷார்ச்சனை, சிதம்பரத்தில் ஆனியிலும்,மார்கழியிலும் ஸ்ரீ நடராஜப்பெருமான் தேரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்ததும் செய்யப்படுவதைக் காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.

இப்போது நமது கவனத்தில் எழுந்ததைச் சொல்லியே ஆகவேண்டும். முன்பெல்லாம் அர்ச்சனைக்குக் கொடுத்தால் பிரசாதமாக விபூதி-குங்குமம், தேங்காயின் ஒரு பகுதி, ஒரு வாழைப் பழம் ஆகியவை பிரசாதமாக அளிப்பதைப் பக்தர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். எந்தப் புண்ணியவான் துவக்கிவைத்த பழக்கமோ தெரியவில்லை, ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மேற்கூறிய பிரசாதங்களுடன் , கட்டணத்துக்கு ஏற்றபடி அதிரசம்,முறுக்கு,லட்டு,சர்கரைப் பொங்கல்,சுவாமி-அம்பாள் படங்கள், ப்ளாஸ்டிக் தட்டுக்கள், டப்பாக்கள்,  எவர்சில்வர் டிபன் பாக்ஸ்,துணிப்பை ,வெள்ளி டாலர்கள் போன்ற பொருள்களும் கொடுக்கப் படுகின்றன.  வீட்டில் இந்தப்போருள்கள் எல்லாம் இல்லாததுபோலப் பறக்கும் கூட்டம்! உண்மையான பிரசாதத்திற்கு மதிப்பு இல்லாமலேயே போய் விடுகிறது. நம்மிடம் கூடுதலாகப் பணம் வசூலித்து நமக்கு மேற்கண்ட பொருள்களைக் கொடுக்கிறார்கள் என்று ஏன் தோன்றுவதில்லை? அப்படியானால் இந்த வியாபாரத்திற்கு நாமும் உடந்தை தானே?

கோவிலுக்குள் நுழைவதிலிருந்து பலப்பலக் கட்டணங்கள் வசூலிக்கும் நமது அறநிலையத்துறை மட்டும் சும்மா இருக்குமா? கோவில் நிர்வாகத்தின் மூலமே லக்ஷார்ச்சனை, திருவிளக்கு பூஜை முதலியவை செய்யப்படவேண்டும் என்று உத்தரவும் போட்டுவிட்டது. இம்முறை, வரும் சித்திரை  முதல் தேதியில் இருந்து அமுலுக்கு வருகிறது. இதன்மூலம் வருமானத்தை பெருக்குவதும் சாத்தியம் தானே! வியாபாரம் இனிமேல் கொடிகட்டிப் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வளவும் அற்ப சாமான்களுக்கு ஆசைப்பட்டு, பிரசாதத்தை இரண்டாம் பட்சமாக எண்ணியதால் வந்த வினை. எது முக்கியம் என்று நமக்குத் தோன்ற வேண்டும்  அதுவரை இதை அனுபவித்தே ஆகவேண்டும்.  

No comments:

Post a Comment