Thursday, June 7, 2012

உதவிகள் பலவிதம்


உதவிகள் பலவகைப்படும். அவற்றுள் அறம் சார்ந்த உதவிகள் உயர்ந்தவை. ஒரு மரம் கூட நமக்கு நிழல் தந்து உதவும்போது, நாமும் அவ்வகையில் ஏதாவது செய்ய வேண்டாமா? இந்தக் காலத்தில் பிச்சைக் காரனுக்கு காசு போடுவதும் உதவி எனப்படுகிறது. எத்தனையோ பிச்சைக் காரர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒரு வேளை இதை எதிர்பார்த்துத்தான் ,"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்றார்களோ?

இதில் அரசாங்கமும் ஒன்றும் சளைத்ததாகத் தெரியவில்லை. ஊக்குவித்தல் என்ற பெயரில் லக்ஷக் கணக்கிலும், ஏன், கோடிக் கணக்கிலும் வரிப்பணத்தை செலவழிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பெயர் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் அத்திரையைச் சேர்ந்த எத்தனை பேர் மக்களுக்கு உதவுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? கோடீஸ்வரர்களாகத் திகழும் விளையாட்டு வீரர்களும் அகாடமி ,ஹோட்டல் என்று ஏற்படுத்தி வருமானத்தைப் பன் மடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பெறும் பரிசுப் பொருள்களுக்கு வரி விலக்கு வேறு!! விளம்பரத்தின் மூலமாக மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்?

அண்மையில் ஒரு விளையாட்டு வீரர் உலக அளவில் வெற்றி பெற்றபோது, பாராட்டுவதோடு நிற்காமல் , இதற்கு முன் நான் அவருக்கு இவ்வளவு லட்சங்கள் கொடுத்தேன் என்றார் ஒருவர் . இதைக் கேட்ட இன்னொருவர் நான் அதற்கும் மேலே தருகிறேன் என்று அவருக்கு சில கோடிகள் கொடுத்தார். இப்படிப் பரிசுமழை பெற்றவர் ஒன்றும் வசதி இல்லாதவர்  இல்லை. வரிப்பணம் வீணாகப் போகிறதே என்று ஒரு வாசகர் தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்காக இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு அள்ளித் தர வேண்டுமென்பதில்லை.

ஆலய சிப்பந்திகளின் அவல நிலையைப் பற்றிப் பலமுறை குரல் கொடுத்து வருகிறோம். அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும் செவி மடுப்பதாகத் தெரியவில்லை. வசதி உள்ள இடங்களுக்கே உதவியும் ஊக்கமும் போய்ச்  சேருகின்றன. சமூக சேவை என்பது கல்விக்கும் உடல் நலத்துக்கும் மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையில் தத்தளிக்கும் மற்றவர்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்களோ தெரியவில்லை. சேவை வரி, கல்வி வரி ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள். ஆனால், உண்டியல்கள் , பிற வருமானங்கள் மூலம் கோயில்களுக்கு வரும் நிதியைக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மாத சம்பளம் கணிசமாகக் கொடுக்கப்படுவதுபோல் ஆலய சிப்பந்திகளுக்கும் ஏன் கொடுக்க முன் வருவதில்லை? அவர்களை வருமான அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்களாக அறிவிக்கலாமே.

நிறைவாக ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். ஒரு நடனக் கலைஞர் பிரபலம் அடைந்துவிட்டால், தான் இன்று ஆடுவது, எல்லா உலகங்களையும் ஆட்டுவிக்கும் நடராஜப் பெருமானின் அருள் என்பதை உணர்ந்து, அவனது நிருத்த சபைகளைத் திருப்பணி செய்ய முன் வர வேண்டும். ஒரு சதுரங்கவீரர்  தான் பெறும் பல கோடிகளின் சிறு பகுதியையாவது, மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமான பூவனூர் சதுரங்க வல்லபேச் வரர்   கோயிலுக்கு அர்ப்பணிக்க முன் வர வேண்டும்.

பழந்துணிகளைக் காப்பகத்திற்குத் தந்து விட்டு, பிரமாதமாக சமூக சேவை செய்து விட்டதாகச் சொல்லிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் ஆணிவேருக்குச் செய்யப்படும் உதவி பிற்காலத்தில் மரமாக வளர்ந்து பலன் அளிக்கும். சிவதர்மம் செய்யும் போது, சிவ பெருமான் மட்டுமல்லாமல் உதவியைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைவர். செய்து பார்த்தால் தானே அதன் பலனும் பெருமையும் தெரிய வரும்! பிறருக்கு நிழல் தந்து உதவும் ஆல மரத்தையே தேர்ந்தெடுத்து அதன்கீழ் வேதப் பொருள்களை உரைத்த தக்ஷிணா மூர்த்தி, தர்மத்தின் உறைவிடம் அல்லவா; நம்மையும் அறம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றுகிறது அல்லவா?

" .... அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்." -- சம்பந்தர் தேவாரம்.

2 comments:

  1. Unparalleled exposition of the symbology of the Vata Vriksha.

    ReplyDelete
  2. In such instances public money is being spent for personal propaganda and general publicity purposes.I do not know if any executive guidelines do exist governing the same, let alone hope for any judicial scrutiny for such unregulated throwaway of tax payer's money for unproductive purpose.

    If such huge amount is donated by the Government for developing the cause of furtherance of such challenging skills,a social purpose is intended and probably achieved in due course of time and it becomes a rightful expenditure.

    The duty of any Government is mainly to extend encouragement before achievement and not to indulge in hero worship whatever might be the achievement.After all the intention of the government shall focus on everybody achieving everything and to excel the same, continuously and all the time.

    In the present context, the benefactor concerned can easily spare and spend part of this particular bonanza,(not at all referring to to the prize money he won in his individual capacity),for social causes indicated by the web master.

    Prof.R.N.S.Mani

    ReplyDelete