Saturday, February 11, 2012

பெற்றோர் கடமை


 சென்ற தலைமுறையில் பெற்றோருக்கு இருந்த கடமைகளைவிட இந்தத்  தலைமுறையில் அவர்களுக்கு இருக்கும் கடமைகள் அதிகம் . நல்ல பள்ளிக் கூடத்தில் குழந்தைகளைப் படிக்கவைத்து விட்டால் மட்டும் போதாது. அவர்களுக்கு நல்ல குணங்கள் கற்றுக்கொடுப்பதில் எத்தனை பெற்றோர்கள் அக்கறை காட்டுகிறார்கள் ? பெரியவர்களுக்கே நல்ல குணங்கள் இல்லாதபோது குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கமுடியும் என்று கேட்கலாம். முதலில் குழந்தைகளுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே பலருக்குத் தெரிவதில்லை. பெற்றோர்களது ஒவ்வொரு செயலையும் இக்காலக் குழந்தைகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். போதாத குறைக்கு வீடு தேடிவரும் படங்களும் பாடல்களும் மூளையைப் பாழாக்கி வருவதோடு சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆக்கிரமிக்கின்றன.

              முன்பெல்லாம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு நீதிக் கதைகளையும் எளிய பக்திப் பாடல்களையும் சொல்லிக் கொடுப்பதோடு , யாராவது விருந்தினர் தங்கள் வீட்டுக்கு  வந்தால் அவர்களுக்கு முன்னால் அக்குழந்தைகளை விட்டுச் சொல்லச் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வார்கள். அண்மையில் ரயிலில் பயணம் செய்த போது, அருகில் அமர்ந்திருந்த பயணிகளில் ஒரு பெண்மணி, தனது நான்கு வயது குழந்தையிடம் என்ன சொன்னாள் தெரியுமா? "எல்லாருக்கும் கொலைவெறி பாட்டு பாடிக்காட்டு" என்றவுடன் அதிர்ந்து போனேன். கொஞ்சம் தயங்கிய குழந்தைக்குத் "தைரியம் " கொடுத்துத், தானே முதல் அடியைப் பாடியும் காட்டினாள் அப்பெண். இக்காலக் குழந்தைகள், " கொலைன்னா என்னம்மா? " என்று கேட்டால் அதற்குப்  பெற்றோர்கள் என்ன பதில் சொல்வார்களோ தெரியவில்லை.

                அதே சமயம் நல்ல பழக்கவழக்கங்களை இக்காலக் குழந்தைகள் சீக்கிரமாகவே கிரகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு இரண்டு வயதுக் குழந்தை ஒரு நாள் மாலையில் வந்திருந்தபோது, அவனது நெற்றியிலும் கைகளிலும் விபூதி இட்டுவிட்டதால் மீண்டும் மாலை நேரங்களில் வரும்போதெல்லாம் அவனாகவே பூஜை அறைக்குள் சென்று விபூதி டப்பாவை எடுத்து வந்து கையில் தருகிறான். முழுமையாகப் பேச்சு இன்னும் வராவிட்டாலும் தனது கைகளால் நெற்றியைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தில் விபூதியை இட்டுவிடும் படி சைகையால் காட்டுகிறான். குழந்தைகள் நல்ல வழியைக் கடைப் பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள். முதலில் பெரியவர்கள் அதற்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும். குடிப் பழக்கமும், புகைப் பழக்கமும் உள்ள தகப்பனைப் பார்க்கும் குழந்தை, பிற்காலத்தில் அதே வழியில் செல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

                 இன்னும் சில பெற்றோர்கள் தேவைக்கு மீறிய செல்லம்  கொடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். இதை குழந்தைகளும் நன்றாகவே பயன் படுத்திக் கொள்கிறார்கள். அடம் பிடித்து  வேண்டியதை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கூடம் போய் வர டூ வீலர் வாங்கித்தருவது,விலை உயர்ந்த செல் போன் வாங்கித்தருவது என்று தாராளமாக இருந்து விட்டுப் பிற்காலத்தில் பெற்றோர்  சொல்வதைக் கேளாமல் பாதை மாறிப் போவதைப் பார்த்துத் துடிப்பதை விட என்ன செய்ய முடியும்? சரிவரப் படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியையைக் கொலை செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் , வன்முறைகள் நிறைந்த ஒரு ஹிந்திப் படத்தை , செல்லிலும் சீடி யிலும் வீட்டில் பலமுறை பார்த்தவன் என்று அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.பணம் ஒன்றே குறியாகக் கொண்டு இளம் தலைமுறையை நாசம் செய்யும் இப்படிப்பட்ட படங்களை இனியாவது புறக்கணிக்க முன்வரவேண்டும். அரசாங்கமும் தனிக்கையைத் தீவிரமாக்க வேண்டும். கேளிக்கை வரி விலக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அறிவிக்க வேண்டும்.

                   இத்தனைக்கும் நடுவில் நடக்கும் சில அபூர்வமான விஷயத்தையும் இங்கு சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள முதியவர்களும் சீரியல்களையும் படங்களையும் பார்த்துக்கொண்டு டி.வீ யே கதி என்று இருக்கும் போது எத்தனையோ இளைஞர்கள் ஆலயங்களைச்  சுத்தம் செய்தும் , பிரதோஷ காலத்தில் சுவாமியை ரிஷப வாகனத்தில் தோள்களில் வைத்துத் தூக்கிக் கொண்டும் , இன்னும் சிலர் ருத்ரம், சிவபுராணம் ஆகியவற்றை சொல்லிக் கொண்டு ஸ்வாமியோடு கோவிலை வலம் வருவதையும் பார்க்கும் போது, இதைப் பார்த்தாவது வீட்டிலுள்ள  முதியவர்கள் திருந்த மாட்டார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. சில தினங்களுக்கு முன் ஒரு இளைஞர் தொலைபேசியில் கேட்டார்: " நானும் என் நண்பர்களுமாக ஆறு பேர் தேவாரம் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். கற்றுத்தருவீர்களா?" என்றவுடன் உடனே சம்மதித்தேன். அதற்கு அவர், " நாங்கள் எத்தனை தக்ஷிணை தர வேண்டும் " என்றார்.  "நீங்கள்  காட்டும்  ஆர்வம்  இருக்கிறதே, அது மட்டுமே எனக்குத் தரும் தக்ஷிணை" என்றேன். நம் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பிற குழந்தைகளுக்கும் நல்வழி காட்டும் பாக்கியத்தைக்  கொடுத்த பரமேச்வரனுக்குப் பிரதியாக என்ன செய்ய முடியும்? "யான்  இதற்கு இலன் ஓர்  கைம்மாறே." என்ற திருவாசக வரிகளே நினைவுக்கு வருகிறது

3 comments:

  1. Excellent detailed informations Really Hatsoff to you sir.

    ReplyDelete
  2. Thennadudaya Sivane Porti

    It is indeed a crying shame on the part of the TamizhNadu government that it has become a public outcry for the preservation of our sacred temple which in the verge of being demolished. It is the work of the government to ensure ancient heritage sites and holy temples are protected. I pray and hope that the government takes necessary steps to prevent this great disaster. A total annihilation of our great history will be an unforgivable act on the part of those who are responsible of it.
    Any civilised society will make every effort to ensure that their rich and glorious history is not wiped out for ever. The South African Saiva community stand by all other interested parties in the world, that this highway will not be built at the detriment of our sacred temple. Lets us be "SIVA-LISED" and preserve the sanctity all our temples.

    vAnmugil vazhAdhu peyga! malivaLam surakka! mannan
    kOnmuRai arasu seyga! kuRaivilAdhu uyirgaL vAzhga!
    nAnmaRai aRanggaL Ongga natRavam vELvi malga!
    mEnmaikoL saiva nIdhi viLangguga ulagam ellAm!

    With Blessings
    Somasundram Adigalar
    South Africa

    ReplyDelete
  3. aiyya vanakkam..,i love my language very much.,there is nothing more beautiful and sweet than my tamil.,oh my god,i cant express the beauty of it.,since i read,heard "thiruvaasagathirkurugaar oru vasagathirrkum urugaar" and "kanni tamil thanthathoru thiruvaasagam" i had deep desires to read thiruvaasagam.,i read it, felt it and its beauty and meaning made me to fall in love with lord shiva.,i want to read the entire thirumurai.,but i m young and did not get the meaning of many songs.,please guide me with the source alone..,this blog is very good and i love it.,my mail sathyaseelanoml@yahoo.com

    ReplyDelete