Wednesday, August 25, 2010

காயத்ரி ஜப மகிமை

"காயத்ரி ஜபம்" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு எழுதியிருந்தோம். அதன் முக்கியத்துவத்தைக் கருதி மேலும் கொஞ்சம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. அதன் பெருமை தெரியாததாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் சிரத்தை இல்லாமலும் அரைகுறையாகப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுவதுமாக இருக்கிறார்கள். அன்றையதினம் விடுமுறையாக இருந்தாலும் நிதானமாக, சிரத்தையுடன் ஜபம் செய்வார்களா என்பது வேறு விஷயம். அப்பா எப்பொழுது எழுந்திருப்பார் என்று பார்த்துக்கொண்டே அருகில் ஜபம் பண்ணும் பிள்ளை. அப்பாவும் பிள்ளையுமாக ஜபம் பண்ணியதைப்(??) பார்த்துப் பூரித்த அம்மா. எவ்வளவு பேர் வீட்டில் இது போல் நடக்கிறது? தினசரி சந்த்யாவந்தனத்தைப் பண்ணாமல் ஆவணி அவிட்டத்தையும் காயத்ரி ஜெபத்தையும்கண் துடைப்பாகப்பண்ணும் குடும்பங்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன.

மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் செய்யப்படுவது இக்கர்மா. தீட்டு வந்த போது கூட இதைச் செய்ய வேண்டும். ஸ்ரீ பரமேச்வரன் இதைச் செய்ததாக குமார சம்பவத்தில் கவி காளிதாசன் குறிப்பிடுகிறார். இதைச் செய்யாமல் வேறு எந்தக் கர்மாவை செய்தாலும் பலன் தராது. வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யும் இடம், தேவ பூஜை செய்யும் இடம்,பசுமாடு கட்டும் கொட்டகை,துளசி மாடம் ஆகியவற்றின் அருகில் காயத்ரி ஜபம் செய்வது அதிகப் பலனைத்தரும். ஹோமமாகச் செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் காரிய சித்தியும் பாப நிவர்த்தியும், இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்.

அர்த்தம் தெரியாததால் இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவை விட்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆ சத்யேன எனத் தொடங்கும் மந்த்ரம் தீர்காயுளைப் பிரார்த்திக்கிறது. அதன் சுருக்கமான பொருளாவது: " நூறு வருஷம் உதய காலத்தில் சூரிய மண்டலத்தைத் தரிசிப்போம்.நூறு வருஷம் ஜீவிப்போம். நூறு வருஷம் புத்திர பௌத்ராதிகளோடு இருப்போம்.நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம். அப்பொழுது நல்ல சொற்களையே பேசுவோம். நல்ல சொற்களையே கேட்போம்.சத்ருக்கள் யாரும் எங்களை ஜெயிக்கப்படாதவர்கள் ஆவோம். " என்று ப்ரத்யக்ஷ தெய்வமான சூர்யனிடம் வேண்டப்படுகிறது.

இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவைப் பண்ணாமல் ஆயுளை வீணாகக் கழிக்கக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக ஆவர்த்தி ஜபம் பண்ண முடியும். ரிடையர் ஆனவர்கள் இத்தனை வருஷம் பண்ணமுடியாமல் போயிருந்தாலும் இனிமேலாவது அதிக சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இதனால் குடும்பம் க்ஷேமம் அடைவதோடு,லோக க்ஷேமமும் உண்டாகும். நமது எல்லா அபராதங்களையும் மன்னிக்கும் வேத மாதா இதற்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment